பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள வர்த்தமானி இரத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 24, 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வௌியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ. விமலவீரவினால் புதிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்டிருந்த இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதாக அமைச்சரால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ. ஜயசுந்தரவினாலும் இதனை இரத்துச் செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி ​வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். 

இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த மொத்தக் கொடுப்பனவாக 1,700 ரூபா கிடைக்கும் என தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார்.

மேலதிக கொழுந்து கிலோ கிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் மே மாதம் 21ஆம் திகதி வௌியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வௌியிடப்பட்ட அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய குறித்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் 3 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment