பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு - புகையிரத சாரதிகள் சங்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 9, 2024

பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு - புகையிரத சாரதிகள் சங்கம் எச்சரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத இயந்திர இயக்கவியல் பொறியியலாளர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பால் ஞாயிற்றுக்கிழமை (09) 50 அலுவலக புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இந்த பணிப்புறக்கணிப்பால் பொது பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கத்தினருக்கும், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் திங்கட்கிழமை (10) போக்குவரத்து அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உட்பட சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி புகையிரத இயக்கவியல் பொறியியலாளர் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மூன்று புகையிரத சாரதிகள் பிரிவினர் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபட்டனர். புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை (09) 50 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ஒருசில புகையிரதங்கள் தாமதமான நிலையில் சேவையில் ஈடுபட்டன. இருப்பினும் தூர பிரதேச மற்றும் தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டன.

இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க குறிப்பிட்டதாவது, எமது சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்துக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் அறிவித்தோம். இருப்பினும் உரிய பதில் கிடைக்கவில்லை.

சேவைக்கு புதிதாக சாரதிகளை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறோம். புதிய ஆட்சேர்ப்புகள் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காமல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கொடுக்காமல் முறையற்ற வகையில் அரசாங்கம் செயற்பட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் சாரதிகள் சங்கத்தினரையும் பணிப்புறக்கணிப்பு இணைத்துக் கொண்டு தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம். இதனால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.

இவ்விடயம் தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் பொல்வத்தே குறிப்பிட்டதாவது, புகையிரத சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment