உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வழங்கப்பட்ட பணம் எங்கே ? : பேராயரை சாடும் மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Friday, June 21, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வழங்கப்பட்ட பணம் எங்கே ? : பேராயரை சாடும் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு பல்வேறு உலக தரப்பினர்கள் பணம் வழங்கினார்கள் எனவும் அது தொடர்பில் தெளிவான அறிக்கையை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ''கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் இலங்கையின் உயர்மட்ட வர்த்தகர்கள் என பலரும் கர்தினாலுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பணம் வழங்கியுள்ளனர்.

எனவே தாக்குதலின் பின்னர் அவருக்கு கிடைத்த பணம் தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் என் மீது 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூறப்போனால் அதிக வழக்குகள் கொண்டவர் என என்னை கின்னஸ் புத்தகத்தில் பெயரிடக்கூடும்.

கர்தினால் தலைமையில் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு ஒரு வழக்கு, அங்கங்களை இழந்தவர்களுக்கு ஒரு வழக்கு என இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் கர்தினாலுக்கு கிடைத்த பணம் தொடர்பில் அவர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அது மக்களுக்கு சென்றடைய வேண்டிய பணம்.

எனினும் என்னுடைய சொந்த பணத்தையே இழப்பீடாக வழங்கினேன். ஆனால் கர்தினாலோ இதுவரையில் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை" என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு புதிய பணிக்குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களினூடாக அறிந்துகொண்டேன். ஆனால், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை.

தேர்தல் ஆணைக்குழுவிடம் இருக்கும், என்னால் நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களினால் மாத்திரமே நிறைவேற்றுக்குழு பங்குபற்ற முடியும். தற்போது கட்சிக்குள் இடம்பெறும் அநேகமான விடயங்கள் போலியானவை. இவற்றுக்கு ஏமாற வேண்டாம். இந்த கூட்டம் சட்டத்துக்கு புறம்பாகவே இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கு கூட நிறைவடையவில்லை. வழக்குகளுக்கு தடைகள் மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளன. தடை என்பது வேறு, வழக்கு என்பது வேறு. வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததுமே ஒரு முடிவுக்கு வர முடியும்.

அரச பலத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு செல்லும்போதே இதிலுள்ள உண்மை நிலைமையை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனக்கு தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தடையுத்தரவுகளும் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை நான் தலைமைத்துவத்தில் இருந்தால் கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

நீதிமன்ற தடையுத்தரவுகளுடன் நான் பதவியில் இருந்து, ஒருவேளை இன்றிரவே பாராளுமன்றத்தை கலைத்தால் எமது கட்சியின் சார்பில் எந்தவொரு மாவட்டத்திலும் வேட்பாளர்களால் போட்டியிட முடியாது. தலைவருக்கு எதிராக தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் இருப்பதால் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளாது.

ஒருவேளை இன்றிரவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு எம்மால் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது. எனக்கு எதிராக தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் இருப்பதால் வேட்புமனுதாக்கலை தேர்தல் ஆணைக்குழு ஏற்காது.

அதன் காரணமாக, ஆதரவாளர்கள் பற்றியும் நாடு பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைப்பாளர்களின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்தே எனது பதவியை இராஜிநாமா செய்தேன்.

அவ்வாறு பதவியை இராஜிநாமா செய்திருக்காவிட்டால் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு துரோகம் இழைத்தவனாகிவிடுவோம். அதனால், வேட்பாளர்களுக்கு பாரதூரமான சிக்கலும் ஏற்படும். அதன் காரணமாகவே இராஜிநாமா செய்தேன்.

No comments:

Post a Comment