ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உதயமான காணி உரிமை அற்றவர்களுக்கு, காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) வடமேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் செயற்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவது குறித்து ஆளுனர் நஸீர் அஹமட், இதன்போது தீவிர கவனம் செலுத்தினார்.
“உறுமய” காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பிரதேச மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடத்தி, உரிய பயனாளிகளை தெரிவு செய்து, அவர்களுக்கான காணி உறுதி வழங்கும் செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஆளுனர் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் தற்போதைக்கு “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் குறித்து ஒரு பட்டியலையும், சிற்சிறு குறைபாடுகள் கொண்ட விண்ணப்பங்கள் குறித்து இன்னொரு பட்டியலை தயார் செய்யுமாறும் ஆளுனர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
“உறுமய” காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை பரீட்சித்தல், அவற்றின் நகல் பிரதிகளை கணினி மயப்படுத்தல், உரிய இடங்களுக்கு இணையத்தளம் ஊடாக அனுப்பி வைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு ஆளணி வளப் பற்றாக்குறை இருப்பதாக பிரதேச செயலாளர்கள் பலரும் சுட்டிக்காட்டினர்.
உடனடியாக செயற்பட்ட ஆளுனர், வடமேல் மாகாண சபையின் தொழிற்பயிற்சி நிலையங்களில் கணினி தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளோரை நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் தற்காலிகமாக சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அனுமதியை ஆளுனர் நஸீர் அஹமட் வழங்கினார்.
அதன் மூலம் சகல பிரதேச செயலகங்களுக்கும் தகுதி வாய்ந்த பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதன் மூலம் துரித கதியில் “உறுமய” செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆளணி வளம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதேச செயலாளர்கள் காணி உறுதி வழங்குதல் தொடர்பான புள்ளிவிபரங்களை வழங்குவதை விட, அவற்றை நிறைவேற்றிய பின்னர் அது தொடர்பான விபரங்களை வழங்குவதையே தான் விரும்புவதாக ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.
வெறும் புள்ளிவிபரங்களை முன்வைப்பதை விட பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆளுனர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மாகாண நில அளவைத் திணைக்களம், மாகாண காணித் திணைக்களம் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு கண்டிப்பான முறையில் ஆளுனர் பணிப்புரை விடுத்தார்.
“உறுமய’ நிகழ்ச்சித் திட்டமானது ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த ஒரு செயற்திட்டம் என்பதால் அதனை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஆளுனர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களைப் போன்றே “உறுமய” காணி உறுதி வழங்கும் செயற்பாட்டிலும் ஏனைய மாகாணங்களை விட வடமேல் மாகாணம் முன்னணியில் இருக்கும் வகையில் செயற்படுமாறும் அதிகாரிகளுக்கு ஆளுனர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடமேல் மாகாண பிரதான செயலாளர் தீபிகா கே குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், மாகாண காணி, கூட்டுறவு அமைச்சின் செயலாளர் சுதர்சனி, குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க, புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.ஹேரத் மற்றும் குருநாகல், புத்தளம் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment