(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக்குழு நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்ட ரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாலின சமத்துவம் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (18) சபைக்கு அறிவித்த பின்னர், அது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில், நிறைவேற்று அதிகாரி, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல் இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைபாடுகள் இருப்பின், தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இது திருத்தப்பட வேண்டும்
ஒரு நிறுவனம் மற்றொன்றை அடக்கி அல்லது மௌனமாக்கும் பிம்பத்தை உருவாக்காதீர்கள். வேறு ஒரு முறையைப் பின்பற்றி, ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரி செய்யும் அரசியலமைப்பு முறைக்குச் செல்ல வேண்டும்.
உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக் குழுக்களை நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்ட ரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment