(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை. ஆகவே இந்த தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது அமைச்சரவையின் நிலைப்பாடா? நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டத்துறை, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளின் அதிகாரங்களும் வேறுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறையின் அதிகாரத்தில் பிறிதொரு துறை தலையிடக்கூடாது என்பது அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்தை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள வியாக்கியானம் குறித்து மகிழ்ச்சியடையப் போவதில்லை. பாராளுமன்றத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடா?அல்லது அமைச்சரவையின் நிலைப்பாடா? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கை பௌத்த நாடு அரசியலமைப்பில் ஆண், பெண் என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் காண்பிக்கப்படவில்லை. சட்டத்தின் ஊடாக ஆண், பெண் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். அதேபோல் பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் பாலினத்துக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலின தரப்பினரது செயற்பாடு உலகளாவிய ரீதியில் எவ்வாறு காணப்படுகிறது என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். மேற்குலக கலாசாரத்தை பின்பற்றினால் இலங்கைக்கே உரித்தான சுதேச கலாச்சாரம் இல்லாதொழியும் என்றார்.
No comments:
Post a Comment