விஞ்ஞான பாடத்திற்கு அனைவருக்கும் இரண்டு மேலதிக புள்ளிகள் : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 16, 2024

விஞ்ஞான பாடத்திற்கு அனைவருக்கும் இரண்டு மேலதிக புள்ளிகள் : பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் இம்முறை விஞ்ஞான பாட வினாத்தாளின் இரண்டு கேள்விகளுக்கு இரண்டு புள்ளிகளை மேலதிகமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பாட வினாத்தாளில் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்காகவே இவ்வாறு இரண்டு புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட உள்ளன. 

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாளில், கற்பித்தலுக்கு உட்படாத பிரத்தியேக கேள்விகள் வந்துள்ளமை பற்றி கவனம் செலுத்தப்பட்டன. இது தொடர்பில் கவனம் செலுத்தியே இப்புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. 

பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடந்த மே 06 இல், ஆரம்பமானது. இப்பரீட்சை நேற்றுடன் (15) நிறைவு பெற்றது. இந்த வகையில் எந்த பரீட்சை வினாத்தாள்களும் ரத்துச் செய்யப்படாமல் வெற்றிகரமாக பரீட்சை நடவடிக்கைகள் நிறைவு பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் பரீட்சை முறைகேடுகள் சில இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. பரீட்சை தொடர்பான சட்டங்கள் இம்முறை கடுமையான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாலேயே, இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

ஆங்கிலப் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் எந்த விதத்திலும் வினாத்தாள்கள் வெளியிடப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் இடம்பெறும்போது அவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பரீட்சை இடம்பெறும் போது வினாத்தாள்களில் ஏதாவது சிக்கல்கள் காணப்படுமானால், பரீட்சாத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment