(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுடனே உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தை இன்று வெள்ளிக்கிழமை (10) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவிப்பு விடுத்தது.
தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தை நாங்கன் இன்று திறந்து வைத்துள்ளோம். ராஜபக்ஷர்கள் மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைய வேண்டிய தேவையில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள். நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்தியே பொதுஜன பெரமுன செயற்படுகிறது என்பதை பெரும்பான்மையின மக்கள் அறிவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது. அரசியல் கொள்கையில் மாத்திரமே மாறுபட்ட தன்மை காணப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன் கட்சி மட்டத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சென்றவர்கள் இறுதி தருணத்தில் எம்முடன் ஒன்றிணைவார்கள் என்றார்.
No comments:
Post a Comment