முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் துயரங்களை அனுபவித்தபோது பாற்சோறு கொடுத்து சிங்கக்கொடி ஏந்தி கொண்டாடியவர்கள், இப்போது பலஸ்தீனம் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிப்பது விந்தையானது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாலஸ்தீனத்தின் இன்றைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், எனினும் இஸ்ரேல் - பலஸ்தீன ஆயுத மோதலில் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெறுமதியான உயிர்கள் கொல்லப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்விடயம் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவதைப் போன்று “உனக்கு வந்தால் இரத்தம், எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்பது போன்றே உள்ளதாகவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.
சொந்த நாட்டுக்குள் சொந்த சமூகம் அழிக்கப்பட்டபோது கொண்டாடினர். 2009 மே மாதத்தில் வடக்கில் ஒரு முள்ளிவாய்க்கால் என்றால், கிழக்கில் பல முள்ளிவாய்க்கல்களை கூற முடியும்.
வீரமுனை படுகொலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை, சவுக்கடி படுகொலை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்த சம்பவம், ஏன் வீரமுனை தொடக்கம் திருகோணமலை வரை நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்கள் இருந்துள்ளன. இதன்போது கவலைப்படாதவர்கள் இப்போது பலஸ்தீன விடயத்தில் முதலைக்கண்ணீர் வடித்து குரலெழுப்புவது வேடிக்கையானது என்றும் அவர் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment