அரசாங்கம் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சித்துள்ளது : கலந்துரையாடல்கள் எப்போதுதான் முடிவடையுமோ தெரியாது - சுஜித் சஞ்சய் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 14, 2024

அரசாங்கம் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சித்துள்ளது : கலந்துரையாடல்கள் எப்போதுதான் முடிவடையுமோ தெரியாது - சுஜித் சஞ்சய் பெரேரா

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தொழிலாளர் தினத்தன்று ஜனாதிபதி அறிவித்தபோதும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஆனால் 14 நாட்கள் கடந்தும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் முன்னதாகவும் அறிவித்திருந்தனர்.

ஜனாதிபதியின் வாக்குறுதி தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்கம், தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் மற்றும் தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. ஆனால் தோட்ட கம்பனிகளோடு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இச்சந்திப்பில் தொழில் அமைச்சரும் கலந்து கொண்டார். இவ்வாறான நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ஆக அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் கூறுகிறார். தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி வருவதாகவே தெரிகிறது.

தோட்ட முதலாளிகளின் உடன்பாடின்றி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அப்போதைய தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடினேன். ஆனால் அப்போதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க தோட்ட முதலாளிகள் விரும்பவில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதும் தோட்டத் தொழிலாளர்களை உருஞ்சிக்குடிக்கும் நிலைக்குத் தோட்டக் கம்பனிகள் நிர்ப்பந்தித்தன. 1000 ரூபாவுக்கு தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலக்குகளை வழங்கியுள்ளன.

ஒருவர் 18 கிலோ தண்டுகளை பறிக்க வேண்டும் என தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலக்கு வழங்கியிருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட போதிலும் தோட்டக் கம்பனிகளுக்கு இதனால் நஷ்டம் ஏற்படவில்லை.

இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒரு நாளைக்கு 275 மரங்களை வெட்டும் நிலையே காணப்பட்டது. ஆனால் நாட்கூலி 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டதையடுத்து இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 325 மரங்களை வெட்டும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இவ்வாறுதான் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டக் கம்பனிகளால் சுரண்டப்பட்டனர்.

ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் மே முதலாம் திகதி வாக்குறுதி வழங்கினாலும் தற்போது அது குறித்து கலந்துரையாடி வருவதாகவே அரசாங்கம் கூறுகிறது. இந்த கலந்துரையாடல்கள் எப்போதுதான் முடிவடையுமோ தெரியாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கு 1700 ரூபா சம்பளம் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் இன்னும் குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியவில்லை. பாரியளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி நியாயத்தை வழங்குவது ஜனாதிபதியினதும் தொழில் அமைச்சரினதும் பொறுப்பாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதாக அரசாங்கம் கூறுகிறது. சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடுகள் தருவதாகச் சொன்னாலும் அது நடக்காது. ஏமாற்று வேலை.

இந்திய அரசால் 10,000 வீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தும் இதுவரை ஒரு வீடு கூட வழங்கப்படவில்லை. ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்படும் தொகையில் கமிஷன் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதேச அரசியல்வாதிகள் செயற்படுவதால் இந்த வீட்டுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உரித்து திட்டத்தின் கீழ் காணி உரிமை இல்லாத மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், பெருந்தோட்டக் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ஏற்பாடு “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கமோ அல்லது தொழிற்சங்கங்களோ தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருபோதும் காணிகளை வழங்காது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் மட்டுமே இதற்கான தீர்வை வழங்க முடியும். வீடு மற்றும் காணி வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நல்ல புரிதல் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment