இலங்கையரை ரஷ்யாவுக்கு அனுப்பும் மனிதக் கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களால் அங்கு அனுப்பப்பட்டு ரஷ்ய யுத்த களத்தில் உயிரிழந்த இலங்கையரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் உயிருடன் இருப்பவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
ரஷ்ய யுத்தகளத்தில் போராடும் இலங்கையர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எவ்வளவு அறிவுரைகள், எச்சரிக்கைகள் வழங்கினாலும் முகநூலில் வெளியாகும் போலியான விளம்பரங்களுக்கு ஏமாறும் ஒரு தரப்பினர் இன்றும் நாட்டில் உள்ளனர்.
ரஷ்யாவின் சென் பீற்றர் நகரத்தில் காணி வழங்கப்படுவதாகவும், குடும்பத்தாருக்கு விசா மற்றும் 10 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் முநூலில் விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கையர் ரஷ்யாவுக்கு சென்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே, போலியான விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மனித கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ரஷ்ய யுத்தக் களத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மிகுதியாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment