19 வருடங்களாக திருத்தப்படாத பாவனையாளர்களை பாதுகாக்கும் சட்டம் : மொத்த வியாபாரிகள் மீது கை வைக்க முடியாத நிலை : சுமார் 300 பணியாளர்களுக்கு வெற்றிடங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 16, 2024

19 வருடங்களாக திருத்தப்படாத பாவனையாளர்களை பாதுகாக்கும் சட்டம் : மொத்த வியாபாரிகள் மீது கை வைக்க முடியாத நிலை : சுமார் 300 பணியாளர்களுக்கு வெற்றிடங்கள்

19 வருடங்களாகத் தாமதமாகி வரும் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டத் திருத்தத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அண்மையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவுறுத்தியது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் 2021 மற்றும் 2022 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகையைப் பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தலைமையில் கோப் குழு அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலங்கை சுங்கத்துடன் இணைந்து பாரியளவிலான மொத்த வியாபாரங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டபோது, ​​தற்போதைய சட்டத்தின் பிரகாரம், சில்லறை வர்த்தகம் தொடர்பில் மாத்திரமே சோதனைகளை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாகவும் மொத்த விற்பனை அல்லது உற்பத்தியாளர்களின் களஞ்சியங்களைப் பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் இல்லை எனவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

அதற்கமைய, சம்பந்தப்பட்ட துறைகளை உள்ளடக்கிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், அது தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். 
2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சட்டத்திருத்தம் 19 வருடங்களாகத் தாமதமாகி வருவதால், இந்த நடவடிக்கைகள் விரைவாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால் சட்டத்தில் ‘மொத்த’ (மொத்த விற்பனை) என்ற பதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட குழு சுட்டிக்காட்டியது. 

ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதாகவும் அதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் நடந்த கோப் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஏன் குறிப்பிடவில்லை என்று அதிகாரசபை அதிகாரிகளிடம் குழு வினவியது.

அத்துடன், சந்தை விலைக் கட்டுப்பாடு குறித்து வெகுஜன ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டியதன் அவசியமும் வலுவாக வலியுறுத்தப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயார் என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

185 பணியாளர் வெற்றிடங்கள் இருப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகள் 450 பேர் இருக்க வேண்டும் என்றாலும், தற்போது 341 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த 341 பேரில் 277 பேர் மட்டுமே மாவட்ட அளவில் பணிபுரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
அதற்கமைய, உரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கும் விசாரணை அதிகாரிகளை வினைத்திறனுடன் பணியமர்த்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், நுகர்வுப் பொருட்களின் மாதிரிப் பரிசோதனைக்கான ஆய்வக வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க நிறுவனங்களுடன் கலந்துரையாடி இதற்கான சலுகைத் தொகையில் இதனைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

போதுமான எண்ணிக்கையிலான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 2023 இல் கீரி சம்பாவுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தபோது, 1% மட்டுமே சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டது தெரியவந்தது. 

இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதால், விசாரணை அதிகாரிகளை உரிய முறையில் பணியமர்த்தி, வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

சுற்றிவளைப்புகள் தொடர்பான இலக்குகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பற்ற மற்றும் தரக்குறைவான பொருட்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க அடையாளம் காணப்பட்ட பல பொருட்களுக்குப் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அதிகார சபை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட விதிமுறைகளை இரத்துச் செய்வதற்குப் பல நிறுவனங்கள் அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதும் தெரியவந்தது.

பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீளப் பெறுவதற்கு அதிகார சபை காலதாமதமானதன் காரணமாக செயற்திட்டம் தாமதமடைந்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ரூ. 2.7 பில்லியனை செலுத்துமாறு 2018 இல் அதிகார சபைக்கு எதிராக சர்வதேச நியாய சபை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் தெரியவந்தது. 

அதற்கமைய, இது தொடர்பில் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும், மேலதிகமாக உள்ளக விசாரணையொன்றை மேற்கொண்டு அது தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இந்தக் குறைபாடுகளைச் சரி செய்து வினைத்திறன்மிக்க பாதையில் செல்ல வேண்டும் என குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான, இந்திக்க அனுருத்த, சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, பிரேம்நாத் சி. தொலவத்த, யு.கே. சுமித் உடுகும்புற, சஞ்சீவ எதிரிமான்ன, எம். ராமேஸ்வரன், ராஜிகா விக்ரமசிங்க மற்றும் மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment