2022 ஐ விட 2023 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்களில் பெரும் முன்னேற்றம் - ஷெஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

2022 ஐ விட 2023 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்களில் பெரும் முன்னேற்றம் - ஷெஹான் சேமசிங்க

(நா.தனுஜா)

2022 ஆம் ஆண்டு 743 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்திருந்த அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள், 2023 ஆம் ஆண்டில் 456 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்திருப்பதாகவும், இது மிக முக்கிய அடைவு எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் ஓரங்கமாக நட்டத்தில் இயங்கி வரும் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் முழுமையாக அல்லது அவற்றின் குறிப்பிடத்தக்களவான பங்குகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் விளைவாக கடந்த ஆண்டு அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் 456 பில்லியன் ரூபா இலாபம் உழைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரசுக்குச் சொந்தமான தெரிவு செய்யப்பட்ட சில கட்டமைப்புக்களை அல்லது அவற்றின் பங்குகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பது தனியார் துறையினரின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பூகோள பொருளாதார சவால்களை சீரமைப்பதற்கு இன்றியமையாததாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இது அரசாங்கம் தமக்குரிய மிக முக்கிய பொறுப்புக்களில் கவனம் செலுத்துவதற்கும், பொதுமக்களின் வரிப் பணம் செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற பொதுச்சேவை வழங்கல் மீதான முதலீடுகளில் கவனத்தைக் குவிப்பதற்கும் வாய்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'மறுசீரமைப்புக்களும், தெரிவு செய்யப்பட்ட அரச கட்டமைப்புக்களை அல்லது அவற்றின் பங்குகளை தனியார் துறையினருக்கு வழங்குவதும் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடுகளைக் குறைத்தல், சந்தையை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் மேற்கொள்ளல், செயற்திறனின்மைசார் அச்சுறுத்தலைக் குறைத்தல் மற்றும் வணிக செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளைக் குறைத்தல் என்பவற்றுக்கு உதவுகின்றது.

அத்தோடு இவை இலங்கையில் செயற்திறனானதும், போட்டித்தன்மை வாய்ந்ததும், நிலைபேறானதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச் செய்யும்' எனவும் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment