கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

நூருல் ஹுதா உமர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும், அத்துமீறல்களுக்குமான எதிர்ப்பை வெளியிடும் வகையில் கல்முனை வடக்கு பிரதேச சிவில் அமைப்புக்களினால் இன்று (25) கண்டன போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆண்களும், பெண்களுமாக உப பிரதேச செயலத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் முன்னெடுத்துவரும் இந்த போராட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் இனவாதமாக செயற்படுவதாகவும், இந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர்கள் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டனர்.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகப் பிரிவு சுமார் 39,000 சனத் தொகையையும், 29 கிராம சேவகர் பிரிவுகளையும், 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகமாகும். 
இந்நிர்வாக அலகானது 1989 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. 

பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 ஆம் திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 ஆம் திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09 ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28 ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. 

அதனடிப்படையில் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.
கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

தற்போது கலமுனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றதாக அறிகின்றோம்.

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை (தெற்கு) பிரதேச செயலக பிரிவின் "உப அலுவலகம்" ஒன்றாக தரமிறக்குவதற்கான தீர்மானமொன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா இதற்கான பதில் "ஆம்" எனில் அதற்கான அமைச்சரவை பத்திரத்திரத்தின் விபரங்களை வழங்கவும். பதில் "இல்லை" எனில் எதன் அடிப்படையில் இந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? 
பிரதேச செயலமொன்றை "உப அலுவலகமாக" தரமிறக்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றுக்கு எதிரான தீர்மானமொன்றை அமைச்சின் செயலாளரினால் அல்லது அரச அதிகாரி ஒருவரினால் மேற்கொள்ள முடியுமா? இற்கான பதில் "ஆம்" எனில் அதன் சட்ட வலிதுடமை தொடர்பான விளக்கத்தை ஆரதங்களுடன் வழங்கவும்.

ஒரு பிரதேச செயலக பிரிவுக்காக நியமிக்கப்படும் பிரதேச செயலாளர் தான் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவிற்கு அப்பால் தனது அதிகாரங்களை பிரயோகிக்க முடியாது. இருந்தபோதிலும் கல்முனை (தெற்கு) பிரதேச செயலாளர் தனது அதிகாரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினுள் எதுவித சட்ட அங்கீகாரமும் இன்றி பிரயோகித்து வருகின்றார். இது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சட்டவிரோத நடவடிக்கை ஒன்றாகும். 

எதன் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 1993/94 காலப்பகுதியில் தனியான ஆளணி திறைசேரியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய மத்திய, மாகாண அமைச்சுக்கள் திணைக்களங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கென பிரத்தியேகமாக ஆளணிகளை உருவாக்கியுள்ளனர். அதனடிப்படையிலேயே அன்றிலிருந்து இன்றுவரை நியமனங்கள், இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. 

தற்போது உதவி பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர், சமூர்த்தி முகாமையாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தா போன்ற பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக 300 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இருந்தபோதிலும் பிரதான பதவிகளான பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆளணி அங்கீகாரம் இல்லாமல் நியமனங்கள் இடம்பெறலாமா?
"பிரதேச செயலாளார்" மற்றும் "கணக்காளர்" ஆகிய பதவிகள் உள்ளடக்கப்படாமல் பிரதேச செயலகமொன்றுக்கு ஆளணி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்குமா? இற்கான பதில் "ஆம்" எனில் அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவும். பதில் "இல்லை” எனில் பிரதேச செயலாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? 

இலங்கையில் காணப்படும் பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற அனைத்து பிரதேச செலயக பிரிவுகளும் வர்த்தமானிப்படுத்தப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. என ஊடகங்களுக்கு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள விடயம் உண்மைக்கு புறம்பானது என்றும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலக அதிகாரிகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டங்களை புறக்கணித்தமையாலும், அவர்கள் செயற்திட்ட முன்மொழிவுகளை முன்வைக்காமையே காரணம் என்றும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment