வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : 43 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2024

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : 43 பேர் பலி

பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள மற்றும் பெண்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்று (29) உள்ளூர் நேரப்படி இரவு 10.00 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளனர்.

விபத்து குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென் இன்று (01) காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சரியாக நேற்றிரவு 9.50 மணிக்கு அந்தக் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. மேல் தளங்களிலும் உணவகங்கள், துணிக் கடைகள் இருந்தன. இதனால் தீ இன்னும் எளிதாகப் பற்றிப் பரவியது.

13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் 75 பேரை வெளியேற்றினர், இவர்கள் 42 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர்.
டாக்கா மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் 33 பேரும், 10 பேர் அருகிலுள்ள ஷேக் ஹசினா தேசிய தீக்காய சிகிச்சை மையத்திலும் உயிரிழந்தனர். 22 பேர் தீவிர தீக்காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சுவாசக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இந்த விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், சடலங்கள் பல அடையாளம் காண இயலாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் விபத்து குறித்து கூறுகையில், “அந்தக் கட்டடம் மிகவும் ஆபத்தானதாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு தளத்திலும் கேஸ் சிலிண்டர்கள் உண்டு. படிகளில் கூட சிலிண்டர்கள் அடுக்கி வைத்திருப்பார்கள். அதனால் அது ஆபத்தான கட்டடமாகவே இருந்தது” என்றனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து டாக்கா மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment