இந்திய பிரதமரை விமர்சித்த அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 8, 2024

இந்திய பிரதமரை விமர்சித்த அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த 3 அமைச்சர்களின் பதவிகளை மாலைதீவு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

அந்த பதிவில், “லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

மோடியின் இந்த பதிவு தொடர்பாக மாலைதீவு அமைச்சர்கள் சிலர் கேலி செய்யும் வகையிலும், இந்தியர்கள் மீது இன வெறியை காட்டும் வகையிலும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு இந்தியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாலைதீவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே அமைச்சர்கள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாலைதீவு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை இடைநிறுத்தி மாலைதீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment