(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால்தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை . மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது.
டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான 0.73 வீத பங்குகள் தேசிய சேமிப்பு வங்கி வசமுள்ளது. இந்த பங்குகளை திறைசேரிக்கு சொந்தமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி உலகை வலம் வருவதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக மானியம் குறைநிரப்பு பிரேரணை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஜனாதிபதி உலக நாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால்தான் நாட்டின் கடன் நிலை ஸ்தீரமடைந்துள்ளது. பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றியமையாதது.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அடிப்படையற்றது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment