நான் மன்னித்துவிட்டேன், விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் - அரசியல் கைதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 7, 2024

நான் மன்னித்துவிட்டேன், விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் - அரசியல் கைதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு

என்னை கொல்லவந்தவரை நான் மன்னித்துவிட்டேன். சட்டமா அதிபருடன் கலந்துரையாடி சத்தியலீலா என்ற பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

முன்பதாக யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுருந்தார்.

அவ்வாறிருக்க வழக்கு விசாரணையின்போது கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனையுடன் சேர்த்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்திருந்தது

எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தது.

அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் குறித்த குற்றவாளி மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி மன்னித்து வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினூடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார்.

இன்நிலையில் நேற்றையதினம் (06.01.2024) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் குறித்த பெண்மணியின் கருணைமனு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியுடன் குறித்த கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “குறித்த பெண்மணியை எப்போதோ நான் மன்னித்துவிட்டேன்”

ஆகையால், இந்த விடயம் தொடர்பாக நான், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன்” என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment