பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, November 5, 2023

பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் சந்திவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இன்று (05) காலை மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடியதை அடுத்து, அந்த மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக போராட்டம் நடத்தும் பண்ணையாளர்களின் இடம்வரை சென்று, அங்கேயும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர். 

இதனையடுத்து, அந்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர், மாணவர்கள் பேருந்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தை நோக்கி பயணித்தபோது, பேருந்தை பின் தொடர்ந்து சென்ற சந்திவெளி பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் வைத்து பேருந்தை நிறுத்தி, அதிலிருந்த 6 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

அந்த 6 மாணவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொது வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய  குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment