கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை ரஞ்சித் பண்டார முன்னெடுக்கிறார் : கோப் குழுவும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா?, பதில் தலைவரை நியமித்து விசாரியுங்கள் - ஆளும், எதிர்க்கட்சிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 15, 2023

கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை ரஞ்சித் பண்டார முன்னெடுக்கிறார் : கோப் குழுவும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா?, பதில் தலைவரை நியமித்து விசாரியுங்கள் - ஆளும், எதிர்க்கட்சிகள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் முறைகேடுகள் தொடர்பில் கேள்வி எழுப்புபவர்களை குற்றவாளிகளாக்கி, கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார முன்னெடுக்கிறார். எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என அவர் சைகை மூலம் அறிவுறுத்தியதை அவதானிக்க முடிந்தது. ஆகவே கோப் குழுவும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு பதிலாக பதில் தலைவரை நியமித்து கிரிக்கெட் சபை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள்.

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியின் உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைப்பது துரதிஷ்டவசமாகும். ஆகவே எதிரணியின் உறுப்பினரை தலைவராக நியமித்து விசேட தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளும் வழிமுறையை உருவாக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு இடைக்கால தடை விதிப்பதற்கு கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது தேசத்துரோக செயற்பாடாகும். கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் முழு நாட்டுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தவறான விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை செவ்வாய்க்கிழமை (14) கோப் குழுவுக்கு முன்னிலையானது. கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களிடம் கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது கோப் குழுவின் தலைவர் வாயில் விரலை வைத்து பதில் சொல்ல வேண்டாம் என்று சைகை காண்பித்துள்ளார். இந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

கோப் குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பாரதூரமானது. ஆனால் கோப் குழுவின் தலைவர் சாட்சியாளர்களின் கருத்துக்களை முன்கூட்டியதாகவே குறிப்பிடுகிறார். இவரது செயற்பாட்டினால் கோப் குழுவின் உறுப்பினர்களது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, கிரிக்கெட் சபையின் முறைகேடுகள் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வருகிறேன். கோப் குழுவுக்கு கிரிக்கெட் சபையை அழைப்பதை தாமதப்படுத்த வேண்டாம் என்பதை பலமுறை வலியுறுத்தினேன்.

நேற்று கோப் குழுவுக்கு கிரிக்கெட் சபை அழைக்கப்பட்டது. நீங்கள் (சபாநாயகரை நோக்கி) இந்த நாட்டின் முக்கிய பிரஜை நாட்டு மக்களுக்கு நீங்களும் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே கோப் குழுவுக்கு முன்னிலையாகிய கிரிக்கெட் சபையிடம் எழுப்பப்பட்ட கேள்வி, அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான இரண்டு மணித்தியால காணொளியை முழுமையாக பார்வையிடுங்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இரண்டு மணித்தியாலங்களில் ஒட்டு மொத்த மக்களின் ஆணையையும் புறக்கணிக்கும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. கிரிக்கெட் சபையை பாதுகாத்து காலத்தை வீணடிக்கும் நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெற்றன. கிரிக்கெட் சபையை பாதுகாக்கும் ஒப்பந்தத்தை ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் வினையமாக செயற்படுத்தினார்கள்.

இவ்வாறான தன்மையில் கோப் குழுவுக்கு கிரிக்கெட் சபை அழைக்கப்பட்டால் கேள்வி எழுப்பும் தரப்பினர்கள் குற்றவாளியாக்கப்படுவார்கள்.

கிரிக்கெட் சபை தூய்மையாக்கப்படும். கேள்விகள் எழுப்பப்படும்போது பதிலளிக்க வேண்டாம் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார சைகை ஊடாக அறிவுறுத்துகிறார். கோப் குழுவின் தலைவரும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவுக்கு கிரிக்கெட் சபையை அழைப்பதை தடுக்க வேண்டாம். கோப் குழு ஊடாகவே நாட்டு மக்களுக்கு பல விடயங்களை வெளிப்படுத்த முடியும்.

ஆகவே கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் தலைமைத்துவத்தில் இல்லாமல் எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கிரிக்கெட் சபையை கோப் குழுவுக்கு அழைப்பதற்கு அனுமதி வழங்குங்கள். ஆகவே ரஞ்சித் பண்டாரவின் தலைமைத்துவத்தில் கிரிக்கெட் சபையை விசாரணைக்குட்படுத்துவது பயனற்றது என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், கோப் குழுவின் உறுப்பினராக நான் பல ஆண்டு காலம் பதவி வகிக்கிறேன். கோப் குழுவில் சகல உறுப்பினர்களுக்கும் கேள்வி எழுப்பும் உரிமை உண்டு. கோப் குழுவில் முன்னிலையாகிய கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பும் உரிமை மறுக்கப்பட்டது. கிரிக்கெட் சபையின் உறுப்பினர்களை பாதுகாக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிரிக்கெட் சபை உள்ளதே தவிர தனித்து செயற்படவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியின் உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைப்பது துரதிஷ்டவசமாகும். ஆகவே எதிரணியின் உறுப்பினரை தலைவராக நியமித்து விசேட தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளும் வழிமுறையை உருவாக்க வேண்டும்.

கோப் குழுவுக்கு கிரிக்கெட் சபை நேற்று முன்னிலையானது. இதன்போது முக்கிய விடயங்கள் பேசப்படவில்லை. தேவையில்லாத விடயங்கள் மாத்திரமே பேசப்பட்டன. ஆகவே முழுமையான காணொளி பதிவை எனக்கு வழங்குங்கள். கோப் குழுவும் விற்பனை செய்யப்பட்டு விட்டதா என்று வினவ தோன்றுகிறது.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்தே, கோப் குழு மற்றும் கோப் குழுவின் தலைவர் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு பதிலாக பதில் தலைவர் ஒருவரை நியமித்து கிரிக்கெட் சபை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment