(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வட மாகாணத்துக்கு பாரியளவில் ஒதுக்கீடுகளை செய்துள்ளதுடன் வன்னி மாவட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் காணிப் பிரச்சினைக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பாரிய பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த சவால்களை எதிர்கொண்டு, நட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாரியளவில் நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார்.
குறிப்பாக கடற்றொழிலை விருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கி செய்திருப்பதன் மூலம் குறிப்பாக வட மாகாண கடற்றொழிலாளர்களுக்கு பல நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியுமாகிறது.
அத்துடன், வன்னி மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதேபோன்று விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எமது பகுதியை பொறுத்த வரையில் காணி பிரச்சினை என்பது பாரிய பிரச்சினையாகும். என்றாலும் ஜனாதிபதி இதனை உணர்ந்து அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருப்பது எமக்கு கிடைத்திருக்கும் பெரும் வரமாகவே நான் காண்கிறேன்.
மேலும், கிராமிய பாதைகளை புதுப்பிப்பதற்காக வரவு செலவுத் திட்டம் மூலம் 10 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் எமது பிரதேச கிராமிய பாதைகளை புதுப்பிக்க இந்த நிதியில் இருந்து ஒரு பில்லியனாவது வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோன்று மல்வத்து ஓயா அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் வவுனியா மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கும் போதுமான நீர் கிடைக்கிறது என்றார்
No comments:
Post a Comment