பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை விசேட அதிரடிப் படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து புதன்கிழமை (25) இரவு காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேகநபர் 500 போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் அம்பாறை திசாபுர பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேகநபர் வசமிருந்து 500 போதை மாத்திரைகள் உட்பட சந்தேகநபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின்போது விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்ம அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேகநபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சான்றுப் பொருட்களுடன் காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment