அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் வீதி, இசங்கேணிச்சீமை பிரதேசத்தில் நீர்ப்பாசன கால்வாய்க்குள் காலில் ஏற்பட்ட பழைய காயத்தின் காரணமாக வலுக்குறைந்த யானை ஒன்று வீழ்ந்து கடந்த நான்கு நாட்களாக உயிருக்காக போராடியது.
இதனை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மிருக வைத்தியர்கள், அக்கரைப்பற்று பொலிஸார் உட்பட ஏனையோர் குறித்த இடத்துக்கு வருகை தந்து யானையை காப்பாற்றும் முயற்சியில் நான்கு நாட்களாக முயற்சி செய்தும், மருந்து மற்றும் ஊசி கொடுத்தும் அவை பயனளிக்காத நிலையில் குறித்த யானை இன்று (26) காலை உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் அக்கரைப்பற்று இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கால்வாய்க்குள் வீழ்ந்து உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23ஆம் திகதி அதிகாலை இக்காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்தாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் சில தினங்களாக இப்பிரதேசத்தில் இக்காட்டு யானைகள் நடமாடி வந்ததாக பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருதை தந்த அக்கரைப்பற்று பொலிஸார், அம்பாறை வன ஜீவாராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
அத்தோடு பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் கால்வாய்க்குள் அகப்பட்ட யானையினை மீட்பதற்காக பல மணி நேரம் முயற்சித்தும் இக்காட்டு யானையினை கால்வாயினை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.
நீர் அருந்துவதற்காக வருகை தந்த வேளையில் இக்காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், இக்காட்டு யானை வீழ்ந்தபோது குறைந்தளவிலான நீரே காணப்பட்டது.
இருந்த போதிலும் தற்போது இக்கால்வாய் ஊடாக அதிகளவிலான நீர் ஓடிக் கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் யானையினால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் சில மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து பல்வோறான சேதங்களை உண்டு பண்ணி வருவதோடு, அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரையும் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயங்களுக்கு இலக்கான ஆசிரிய ஆலோசகர் தற்போது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment