சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 இல், இலங்கைக்கு வருகை தரவுள்ளதால், எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் நாடு வங்குரோத்து என்ற லேபலை அகற்றிக் கொள்ள முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கான முயற்சிகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணை விவாதத்தில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய வருமான வரி திருத்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பது நாட்டின் வங்குரோத்து லேபலை விரைவாக கழற்றிக் கொள்வதற்காகவேயாகும்.
சுகாதாரத் துறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. இந்த வகையில் சுகாதார சேவையை முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதானால் 500 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அந்தளவு தொகையை தேடிக்கொள்வதானால், இலங்கை வங்குரோத்து லேபலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமல்ல. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த வகையில் நான் சரி. அவர் தவறு என ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு சுகாதாரத்தை அரசியலாக்கக் கூடாது. இதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.
அனைவரும் தவறு செய்துள்ளவர்கள். அந்த வகையில் அனைவருமே ஒன்றிணைந்து அதனை நிவர்த்திக்க வேண்டும் என்றும் அவர் சபையில் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment