ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் காரை இலக்கு வைத்து நேற்று (17) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுராதபுரம் பொலிஸ் களத்தின் லஹிரு விளையாட்டு மைதானத்தில் இருந்து அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தனது தனிப்பட்ட காரில் பயணித்த அவர் காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கி வீட்டை நோக்கிச் சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த காரின் இடது புற இருக்கையை குறி வைத்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்ததுடன், அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்கள் காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகள் அநுராதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அநுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெற்றுள்ளது.
மேலும், அநுராதபுரம் தலைமையக பொலிஸார், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல குழுக்கள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
No comments:
Post a Comment