குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை : அசாத் மௌலானா தற்போது பல மில்லியனுக்கு சொந்தக்காரர் என்கிறார் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை : அசாத் மௌலானா தற்போது பல மில்லியனுக்கு சொந்தக்காரர் என்கிறார் மஹிந்தானந்த

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அன்ஷிப் அசாத் மௌலானா 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6000 ரூபா மாத சம்பளம் பெற்றவர். ஆனால் தற்போது அவர் பல மில்லியனுக்கு சொந்தக்காரராக உள்ளார். ஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷர்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 ஊடகம் 15 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளி தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பின்னணியில்தான் சனல் 4 இவ்வாறான காணொளிகளை வெளியிடுகிறது.

வெள்ளைக்கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட செனல் 4 தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.

சனல் 4 விற்கு முறைப்பாடு அல்லது தகவல்களை வழங்கியுள்ள அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடாக ஊடக செயலாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நபர் சுவிஸ்லாந்து நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளார்.

அன்ஷிப் அசாத் மௌலானா என்ற இந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 700 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தெஹிவளையில் உள்ள வீட்டை 500 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்தளவு செல்வந்தரான இந்த நபர் 2017 ஆம் ஆண்டு முதலாவதாக பணியில் இருந்தபோது 6000 ரூபா மாதச் சம்பளத்தை பெற்றுக் கொண்டுள்ளார். மாதம் 6000 ரூபா சம்பளம் பெற்ற நபரின் வங்கி வைப்பில் 700 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. மறுபுறம் 500 மில்லியன் ரூபாவுக்கு வீட்டை விற்றுள்ளார்.

இவர்தான் தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்க ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார். இவருக்கு எதிராக பொலிஸில் நிதி மோசடி உள்ளிட்ட பல முறைப்பாடுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் முறையற்றது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. ஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மக்களாணையை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், புலனாய்வு பிரிவினர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. மக்களாணையை வெல்ல குண்டுத் தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை.

செனல் 4 குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை தோற்றுவிக்க 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா ?

கோட்டபய ராஜபக்ஷ இரண்டு வருட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பல்வேறு காரணிகளால் அவர் பதவி விலகினார். கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்க செயற்பட்டவர்கள் தாம் இறக்கும் தருணத்தில் அதற்காக வேதனையடைவார்கள். நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களில் ஊழலற்ற அரச தலைவராகவே கோட்டபாய ராஜபக்ஷ செயற்பட்டார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அடிப்படைவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரை பதவி விலக்கினார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment