வட மாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 3, 2023

வட மாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ்

ஆர்.ராம்

இந்திய இழுவைப் படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வட மாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோதமான இழுவைப்படகு உள்ளிட்ட மீன்பிடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியான கரிசனைகளைச் செலுத்தி வருகின்றறேன். மேலும் குறித்த விவகாரத்தினை தீராப்பிரச்சினையாக நீடித்துச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நான் விரும்பவுமில்லை.

ஆகவே, உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அப்பால் வட மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பங்கேற்பைச் செய்ய வேண்டும்.

அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பல்வேறு அரச மற்றும் அரசியல் தரப்பினருடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த தொடர்புகளின் ஊடாக எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

வெறுமனே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள், இலங்கை கடற்படை தாக்குகின்றது என்ற விடயத்தினை மையப்படுத்திய பிரசாரங்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலும், இழுவைப்படகு உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பின்பற்றுவதாலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், வளப்பறிப்புக்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் அன்றாட மற்றும் எதிர்கால நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதையும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்பினரும் தமிழகத்துக்கு தெளிவு படுத்தல்களை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே உள்ளேன். எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நிரந்தரமானதுமான தீர்வினைப் பெறுவத்கு எனது ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்கத் தயாராகவே உள்ளேன்.

அதற்காக, வடக்கு தமிழ் பேசும் அரசியல் வாதிகள் கூட்டாக தமிழகத்துக்கு செல்வதற்கும், அவ்வாறு செல்கின்றபோது அரசியல் பேதங்களை மறந்து என்னையும் உள்ளீர்க்க விரும்பினால் நான் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன்.

மேலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களும் தாம் தமிழகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment