அவசியம் ஏற்படின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் 1999 இல் முதன் முறையாக மலேசியாவில் பரவியது. இந்நிலையில், அண்மையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இவ்வைரஸ் காரணமாக கேரளாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்,ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இணங்காணப்பட்டவர்களில் 1233 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவர்களில், 352 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியம் உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான பின்னணியில், எதிர்காலத்தில் இலங்கையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் நிபா வைரஸ் தொடர்பாக இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின்போது இன்று இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment