(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை இதுவரையில் குறைக்க முடியவில்லை. ஜனாதிபதி சிறைக் கைதியாக மாறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு வழிகள் காணப்படுகிறன. ஒன்று மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொட்டு கட்சியிலிருந்து விலகி வெளியில் வர வேண்டும். அடுத்த ஜனாதிபதி பொது வேட்பாளர் ரணில் எனக் கூறுகிறார்கள். அவர் பொது வேட்பாளர் அல்ல. ராஜபக்ஷக்களின் வேட்பாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பொறுப்புக்கூற வேண்டும். மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு, அவசர மருந்து கொள்வனவு மாபியா என அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவும் ஒப்புக் கொண்டுள்ளது. ஊழல்கள் நிருபிக்கப்படும்போது முன்வந்து அவரே பதவி விலகியிருக்க வேண்டும். இருப்பினும் அவர் அவ்வாறு செய்யவில்லை.
தற்போது பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. மொட்டுக் கட்சியினர் அவருக்கு ஆதரவு வழங்கலாம். அவரை பாதுகாக்கலாம். ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
மேலும் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை இதுவரையில் குறைக்க முடியவில்லை. ஜனாதிபதி சிறைக் கைதியாக மாறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு வழிகள் காணப்படுகின்றன. ஒன்று மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொட்டு கட்சியிலிருந்து விலகி வெளியில் வர வேண்டும். இவ்வாறு இன்றி இந்த இரண்டு கட்சிகளும் இணைய வாய்ப்பில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் அடுத்த தேர்தலின்போது ரணிலுக்கு மொட்டுக் கட்சியினர் ஆதரவு வழங்குவார்கள் எனக் கூறுகிறார்கள். மொட்டுக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. யார் எந்தக் கட்சி என்று எமக்கு விளங்கவில்லை.
பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இருப்பினும் 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் ஊழல் இருக்கிறது.
பொறுப்புகளில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் மேலும் நெருக்கடிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். அன்றாடம் வாழ்க்கைச் செலவைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் வாழ்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment