ரொபட் அன்டனி
இலங்கையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடன் செலுத்த முடியாத நாடாக அறிவித்தமை அரசியலமைப்பை மீறும் செயல்பாடு என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைக்கின்றனர். அவ்வாறு மத்திய வங்கியோ அல்லது அப்போதைய அரசாங்கத் தலைவர்களோ அரச அதிகாரிகளோ அரசியலமைப்பை மீறியிருந்தால் அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எந்த ஒரு விடயத்தையும் வன்முறைகளினால் தீர்க்க முடியாது. மாறாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சில மக்கள் பிரதிநிதிகள் வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டனர். எனவே, பிரதிநிதிகளை தெரிவு செய்யும்போது மக்கள் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார ஊடகவியலாளர் ஷ்யாம் நுவன் கனேவத்த எழுதிய பொருளாதாரக் கொலை என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பு பண்டநாயக்க ஞாபகப்படுத்த சர்வதேச மாநாடு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.
நிகழ்வில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள். சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
‘’2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையை வங்குரோத்து நாடாக அதாவது சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தியமையை அரசியலமைப்பு மீறும் செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விடயத்தில் எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு நாங்கள் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் ஆகிய நாங்கள் என யாராவது இந்த விடயத்தில் அரசியலமைப்பை மீறி இருந்தால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்ல முடியும். சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். எமது மத்திய வங்கி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். திறைசேரி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் நம்புகிறேன்‘’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நந்தலால் வீரசிங்க அன்று மாலையே ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி இலங்கை கடன்களை செலுத்த முடியாத நாடாக பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
இந்த விடயம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. குறிப்பாக அரசாங்கத்தின் அனுமதியின்றி அரசியலமைப்பு மீறும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் இலங்கையை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தினார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த பின்னணியிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
‘’கடந்த வருடம் மே மாதம் ஒன்பதாம் திகதி நாட்டில் பாரிய வன்முறைகள் இடம்பெற்றுத்துடன் அரசியல்வாதிகள் பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நான் கடன் வழங்க முடியாத நாடு என்று இலங்கையை பிரகடனம் செய்தமையே இதற்கு காரணம் என்ன பலர் விமர்சனம் செய்கின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் அரசாங்க ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்குமாறு கருத்துக்களை அப்போது வெளியிட்டனர். இது நியாயமானதா? அவ்வாறு வன்முறையை கையில் எடுத்து செயல்பட முடியுமா‘’ என்றும் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக அரசியல்வாதிகள் பலர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. குறிப்பாக ஆளும் பொதுஜன பெரமுனவின் 70க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
‘’வன்முறைகள் மூலமாக எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தைகள் ஊடாகவே பிரச்சினைகளை தீர்க்க முடியும். எனவே மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் வன்முறையை தவிர்க்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க வேண்டும். ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க அதிகாரிகள் வீடுகளுக்கு தீவைக்குமாறு தெரிவித்தனர். அவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக மக்கள் தீர்மானிக்க வேண்டும். அடுத்து மக்கள் தெரிவு செய்யப்போகின்ற பிரதிநிதிகள் யார் ? அவர்கள் எவ்வாறானவர்கள்? அவர்கள் எதனை ஊக்குவிக்கின்றனர் என்பது தொடர்பாக மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்’’ என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன இந்த கடன் மறுசீரமைப்பு செயல்பாடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் காரணமாக நாங்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றின்போது நாங்கள் நினைத்தால் ஆயிரம் பேரை அழைத்து வந்து மத்திய வங்கியை சுற்றி வளைப்போம் என்று ஒரு சிலர் குறிப்பிட்டனர். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களை அழைத்தோம். வன்முறை மூலம் எதையும் செய்ய முடியாது. பேச்சுவார்த்தைகளையே நாங்கள் நம்புகின்றோம்’’ என்றும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
கடந்த மாதம் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சில சமூக பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தார்.
No comments:
Post a Comment