நாட்டின் மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தரமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதிலுள்ள பிரச்சினைகளை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் தற்போதுள்ள மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியுமென, சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் அடுத்த மாதம் 13ஆம் திகதிக்கு முன்னர் சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மருந்துக் கொள்வனவு செயற்பாட்டிலுள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கும் வெளிப்படையான கொள்வனவு முறையை அறிமுகப்படுத்துவதற்கும் உயர்தர மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மருந்து ஒழுங்குமுறை மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கும் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று கடந்த ஜூலை மாதம் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னதாக மருந்துக் கொள்முதல் செயல்முறை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட வேண்டுமெனவும், சுகாதார அமைச்சு தெரிவித்தது.
No comments:
Post a Comment