(எம்.வை.எம்.சியாம்)
பொருட்களை திருடிய குற்றத்துக்காக சட்டத்துக்கு மாறாக எவரையும் தாக்க முடியாது. பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டால் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் விற்பனை நிலையமொன்றில் பெண் ஒருவர் பொருட்களை திருடியமை தொடர்பில் குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டா வீதியிலுள்ள தனியார் விற்பனை நிலையமொன்றில் பெண் ஒருவர் பொருட்களை திருடியமை தொடர்பில் குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்திருந்தனர்.
குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், தனியார் வர்த்தக விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அங்கு பணி புரியும் தரப்பினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அல்லது பொலிஸூக்கு அறிவிக்கலாம். தாக்குதல் மேற்கொள்வது இதற்கு தீர்வல்ல. தாக்குதல் மேற்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொழில் தளங்களில் தொழில் புரியும் தங்களது பணியாட்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு பதிலாக பொருட்களை திருடி விட்டார் என்பதற்காக தாக்குதல் மேற்கொள்ள முடியாது. குறிப்பாக குறித்த பெண் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவர் என்றார்.
No comments:
Post a Comment