(எம்.வை.எம்.சியாம்)
பொதுவிடங்களில் பயணிக்கும் பொழுது உணவு பானங்களை கொடுத்து சுயநினைவை இழக்க செய்து பொதுமக்களின் பொருட்களை கொள்ளையிட்டு செல்லும் தரப்பொன்று நாட்டில் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவரிடமிருந்த பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், முச்சக்கர வண்டி சாரதியைப்போல காட்டிக் கொண்டு அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணி போன்று காண்பித்து முச்சக்கர வண்டி சாரதிக்கு அல்லது வாடகை அடிப்படையில் பயணிக்கும் பயணிகள் இடத்தில் குறுகிய காலப்பகுதிக்குள் நன்கு உரையாடி அவர்களுக்கு ஒரு வகை பானத்தை அருந்துவதற்கு கொடுத்து சுயநினைவை இழந்த பின்னர் அவர்களிடம் இருக்கும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டு செல்லும் சம்பவங்கள் அண்மையில் அதிகம் பதிவாகியுள்ளன.
இதுபோன்றதொரு சம்பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியிலும் அண்மையில் பதிவாகியிருந்தது. குறித்த பகுதியில் நபர் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு அருகில் இருந்து மயங்கி விழுந்துள்ள சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்தின்போது ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரமோகன் (44) என்ற சந்தேகநபரும், திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த பர்ஷத் நிப்ராஸ் (33) எனும் ஒருவரும் மற்றும் அப்துல் சத்தார் மொஹமட் டில்சான் டில்சாத் (33) எனும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் மூவரும் நாடளாவிய ரீதியில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களுக்கு எதிராக ருவன்வெல்ல, வெல்ல வீதிய, மஹரகம, ஹங்வெல்ல, கம்பஹா, பியகம, வெலிமட, வெயங்கொட உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெலிகம பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2020 ஆண்டு இதுபோன்ற சம்பவம் மூலம் 80 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார். 2021 ஆண்டும் இதுபோன்ற 40 வயதுடைய நபர் ஒருவரும் காணாமல் போயுள்ளார். இருப்பினும் இவர்கள் இருவர் தொடர்பில் தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவங்களுடன் குறித்த சந்தேகநபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த விடயம் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment