A/L பரீட்சை தொடர்பில் ஆணையாளர் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் - கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 19, 2023

A/L பரீட்சை தொடர்பில் ஆணையாளர் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் - கல்வி அமைச்சர்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். மிக விரைவில் அது தொடர்பாக ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கூறுகையில், பரீட்சைகள் கால அட்டவணையில் மறுசீரமைப்புகளை கொண்டு வர வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளை இல்லாமல் செய்யக்கூடாது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கஷ்ட பிரதேச சில பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் இன்னும் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

அத்துடன் 2023 ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இரண்டரை வருட உயர்தர வகுப்பில் கற்கும் காலமும் கிடைக்கவில்லை. நவம்பர் மாதத்தில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கும்போது, ஆசிரியர்கள் குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்கவே முயற்சிப்பர். அதனால் மாணவர்கள் அநீதி ஏற்படுகிறது.

அதேபோன்று இரண்டாவது முறையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பாடப் பிரிவுகளை மாற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராக போதுமான காலம் இல்லை.

இதனால் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பரீட்சையை நடத்தாது. பாடசாலை மூன்றாம் தவணை காலத்தை ஜனவரி 19ஆம் திகதியுடன் நிறைவு செய்து உயர்தரப் பரீட்சையை ஜனவரி 22 முதல் பெப்ரவரி 17 வரையில் நடத்த முடியும். அப்போது பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் பாடசாலை முதலாம் தவணையை ஆரம்பிக்க முடியும்.

அதேபோன்று மே மாதத்தில் பெறுபேற்றை வழங்கவும் முடியுமாக இருக்கும். அவ்வாறு செய்தால் அடுத்த வருடத்தின் பரீட்சையை ஒக்டோபரில் நடத்தவும் முடியுமாக இருக்கும்.

இதனால் பரீட்சையை ஜனவரி 22ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க முடியுமானால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறுகையில், உயர்தரப் பரீட்சையில் தோற்றும் ஒரு இலட்சம் வரையிலான மாணவர்கள் ஒரே குழுவாக இருந்து இந்த வேலைத்திட்டத்திற்கு உறுதியாக இருக்கின்றனர்.

குறிப்பாக 2010 ஆம் ஆண்டு முதல் எடுத்துக் கொண்டால் இந்த பரீட்சைக்காக அதிகளவான காலம் வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 219 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2021 இல் 141 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 2023 இல் 84 நாட்களே வழங்கப்பட்டுள்ளன. இது அநீதியானது என்றார்.

இதன்போது எழுந்த எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கூறுகையில், இது ஒரு இலட்சம் மாணவர்களுடன் தொடர்புடைய பிரச்சினை. இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், பரீட்சைகள் ஆணையாளரை அழைத்து இது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், உயர்தர பரீட்சையை பிற்போடுவதற்கு ரோஹினி கவிரத்ன எம்.பி. யோசனையொன்றை விடுத்துள்ளார். அந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளரின் அவதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர் விரைவில் அறிவிப்பொன்றை வெளியிடுவார் என்றார்.

No comments:

Post a Comment