NMRA, SLMC சட்டங்கள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் : "சுகாதாரத் துறையைச் சிதைப்பதை தடுப்பதும், மருந்துக் கொள்வனவு ஏகபோக உரிமையை எதிர்ப்பதும் எனது முதன்மையான கவனம்" - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 2, 2023

NMRA, SLMC சட்டங்கள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் : "சுகாதாரத் துறையைச் சிதைப்பதை தடுப்பதும், மருந்துக் கொள்வனவு ஏகபோக உரிமையை எதிர்ப்பதும் எனது முதன்மையான கவனம்"

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டங்கள் (SLMC) முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தவறான அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்களால் சுதந்திரமான ஆட்சிக்கு குழப்பம் விளைவிப்பதை கருத்தில் கொண்டு சுகாதார துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்வைப்பது இன்றியமையாதது என, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சில விடயங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, மேற்கொள்ள வேண்டிய 3 முக்கிய சீர்திருத்தங்களை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“1ஆவது மிக முக்கியமானதும் யாதெனில், மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தையை அனுமதிக்கும் பொருட்டு NMRA மற்றும் SLMC சட்டங்கள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.”

“2ஆவது, விஞ்ஞானப் பிரிவு மாத்திரமன்றி அனைத்து பிரிவுகளிலும் கற்ற மாணவர்களுக்கு தாதியர் பணிக்கான வாய்ப்பு திறக்கப்பட வேண்டும்.”

“3ஆவது, இலங்கையில் மருந்துப் பரிசோதனைக்காக, அங்கீகாரத்தின் மிக உயர்ந்த மட்டமான, ‘Benchmark 4’ அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) வழிகாட்டலை பெற வேண்டும்.”

“கேடுகெட்ட அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சிதைக்கும் நோக்கத்துடன் செயற்படுபவர்களின் சுயநலச் செயல்களைத் தடுப்பதும், மருந்து கொள்வனவு ஏகபோக உரிமையை விரும்புவோரை எதிர்ப்பதும் எனது முதன்மையான கவனமாகும்.”

No comments:

Post a Comment