நாவலடியில் சட்டவிரோத காணிகளின் வேலிகள் அதிரடியாக அகற்றப்படுகின்றது. இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தொடர்ச்சியாக போராடுவோம். நாம் வெறுமனே மற்றவர்கள்போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்ல செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காக பாடுபடுபவர்கள். இதனை மக்களும் நன்கு அறிவார்கள். இவ் விடயத்தில் முன்னின்று செயல்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எனது நன்றிகள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இக்காணிக் கொள்ளையானது இங்குள்ள அமைச்சருக்கு வேண்டப்பட்ட வசதி படைத்தவர்களுக்கு தனது அதிகாரங்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல்பாடுகளுக்கு வழியமைத்து கொடுக்கப்படுள்ளது.
காணி இல்லாத மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்பது ஓர் கண்துடைப்பாகும். காணி அல்லாத மக்களுக்கு இல்லாத காணிகள் பணம் படைத்த வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பின்னணி கரணம் என்ன?
மட்டக்களப்பு மாவட்டத்திலும் சரி வடக்கு மற்றும் கிழக்கிலும் சரி மகாவலி அபிவிருத்தி சபையின் காணிப் பிரச்சனைகள் மற்றும் எவ்வாறான பிரச்சினையாக இருக்கட்டும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசுவதனால மட்டும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறான பிரச்சனைகளை தொடர்ச்சியாக விடாப்பிடியான அழுத்தங்கள் வழங்குவதன் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.
அந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் நாவலடி பிரதேசத்திலே நடந்த காணி அபகரிப்பு தொடர்பாக நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் அவர் அதற்கான அழுத்தங்களை உடனடியாக வழங்கியிருந்தார். அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார் அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகின்றேன்.
அத்துடன் அப்பிரச்சனையை அதற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சரரை சந்தித்து அதற்குரிய தீர்வினை கேட்டபோது பார்ப்போம் என்று கூறியிருந்தார். அதில் அவரது பதில் ஆனது சரியான முறையில் வழங்கப்படிருக்கவில்லை.
அதற்கு அடுத்த கட்டமாக நேற்றையதினம் மகாவலி அபிவிருத்தி சபையானது பாராளுமன்ற கோப் (Coop) குழுவிற்கு சமூகமளித்ததை தொடர்ந்து அங்கும் அவர்களுக்கான அழுத்தங்கள் என்னால் பிரயோகிக்கப்பட்டது.
எமது பிரச்சனைக்குரிய தீர்வினை உடனடியாக பெற்று தரும்படி அழுத்தம் கொடுத்தேன். இதனைத் தொடர்ந்து இன்றையதினம் சட்டவிரோத காணிகளில் இடப்பட்டுள்ள அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு வருகின்றது.
உடனடியாக அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக மயிலுத்தமாடு மாதவனை பிரதேசங்களில் உள்ள அத்துமீறிய குடியேற்றங்களையும் அகற்றுவதாக உறுதி தந்துள்ளார்கள்.
எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது எமது தலையாக பொறுப்புகளில் ஒன்றாகும். தொலைபேசி மற்றும் முகநூல் போன்றவற்றின் ஊடாக அழுத்தங்களை பிரயோகித்தால் மட்டும் காணாது இவ்வாறான தொடர்ச்சியான நேரடி செயற்பாடுகளின் மூலமே பல விடயங்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகள் மற்றும் அத்துமீறி குடியேற்றப்பட்ட காணிகளை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறான நேரடி நடவடிக்கைகளை இன்னும் மும்முரமாக மக்கள் சார்ந்து நடைமுறைப்படுத்துவோம் மற்றும் முன்நின்று செயற்படுவோம்.
நேற்றையதினம் மகாவலி சம்பந்தமான பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment