கோட்டாவைப் போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி தவிர்க்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 1, 2023

கோட்டாவைப் போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி தவிர்க்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவைப்போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை - அகலவத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

கோட்டபய ராஜபக்ஷவும் ஆட்சிக்கு வந்தவுடன் வரி குறைப்பு செய்து ஒரு தரப்பினருக்கு வரிச் சலுகை வழங்கினார். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. வரிச் சலுகை வழங்குமாறு நாட்டு மக்கள் கோரவில்லை.

சேதனப்பசளைத் திட்டத்தை நாட்டு மக்கள் கோரவில்லை. அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் கோட்டபய ராஜபக்ஷ சேதனப்பசளைத் திட்டத்தை அமுல்படுத்தினார். இதனால் விவசாயத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார்கள். இது நியாயமானதே. மக்கள் போராட்டத்தை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார். 69 இலட்ச மக்களாணை பலவீனமடையக் கூடாது என்பதற்காக அரசியலமைப்புக்கு அமைய ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்துகிறார்கள். ஆகவே பொருளாதார பாதிப்பு மற்றும் மீட்சி தொடர்பில் மாத்திரம் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் கேட்காத விடயங்களுக்கு அவதானம் செலுத்தி தவறான தரப்பினரது ஆலோசனைகளை கேட்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தவறான ஆலோசனைகளுக்கு செவிசாய்ப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு கடந்த கால சம்பவங்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

ராஜபக்ஷர்களின் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு மக்களாணையுடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment