இலங்கை மக்களின் இலவச சுகாதார சேவையை மாபியாக்களுக்கு விற்று அதன் மூலம் இலாபம் பெறுபவர்களின் சகல தகவல்களும் எம் வசம் - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 2, 2023

இலங்கை மக்களின் இலவச சுகாதார சேவையை மாபியாக்களுக்கு விற்று அதன் மூலம் இலாபம் பெறுபவர்களின் சகல தகவல்களும் எம் வசம் - காவிந்த ஜயவர்தன

(எம்.மனோசித்ரா)

இலங்கை மக்களின் இலவச சுகாதார சேவையை மாபியாக்களுக்கு விற்று, அதன் மூலம் இலாபம் பெறுபவர்கள் தொடர்பான சகல தகவல்களும் எம் வசம் உள்ளன. எனவே, யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு தொடர்ந்தும் இவ்வாறான மோசடியில் ஈடுபட வேண்டாம் என சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை எச்சரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அவரது அதிகாரிகளால் இலவச சுகாதாரத்துறைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளோம். இதற்கு ஆதரவளிப்பதாக பல்வேறு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

மனசாட்சி இல்லாதவர்களே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பார்கள். நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது அவர்கள் யார் என்பதை மக்களால் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மருந்து மாபியாக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் எமக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. எனினும், அவற்றுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. மருந்து மாபியாக்களுடன் மோதுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். எமது உயிரை பணயமாக வைத்து மக்களுக்காக எமது கடமையை நாம் நிறைவேற்றுவோம்.

பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்து, அவற்றை இலங்கை மக்களுக்கு வழங்கி பரிசோதிக்கின்றனர். அதன் பெறுபேறுகளை அவதானித்து அதன் பின்னரே ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் பல உயிரிழப்புக்களும் பதிவாகின்றன.

ஆனால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தரக்குறைவான மருந்துகள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றார். முட்டாள்த்தனமான கருத்துக்களையே அவர் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார். தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாகவே மக்கள் உயிரிழக்கின்றனர் என்பது அவருக்கு தெரியவில்லையா?

இலங்கை மக்களின் இலவச சுகாதார சேவையை மாபியாக்களுக்கு விற்று, அதன் மூலம் இலாபம் பெறுபவர்களின் சகல தகவல்களும் எம் வசம் உள்ளன. எனவே, யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு தொடர்ந்தும் இவ்வாறான மோசடியில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment