(எம்.வை.எம்.சியாம்)
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி முழு உலகையும் வெற்றி கொண்டது எமது ஆட்சியில்தான். நாட்டின் ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை என்னனால் பதவியில் அமர முடியும். ஜனாதிபதியாக மீண்டும் பதவி வகிப்பதற்குத் தேவையான அனுபவம் என்னிடம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளுடன் இருந்த சுமுகமற்ற உறவுகளை மீள புதுபித்து வலுப்படுத்தியது எனது ஆட்சிக் காலத்தில்தான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.
தற்போது தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மீனவர்களோ, பொதுமக்களோ மகிழ்ச்சியாக இல்லை. பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இப்போதெல்லாம் பாடசாலைகளுக்குள் போதைப் பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது.
இந்தப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் உணர்கிறோம். நாம் அதை செய்ய முடியும். ஒரு கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன.
போதைப் பொருளை முற்றாக பாடசாலைகளில் இருந்து ஒழிப்பது கட்டாயம். இது மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில் முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு எனக்கு எந்த சிரமமும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment