(இராஜதுரை ஹஷான்)
சுகாதார அமைச்சின் தவறான தீர்மானங்களினால் சுகாதார சேவை பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளது. மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. ஆகவே நாட்டு மக்களை கடவுள்தான் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி வஜிர பிள்ளையார் ஆலயத்தில் புதன்கிழமை (30) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டு மக்கள் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக மட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது. மக்களும் விரக்தி நிலையில் வாழ்கிறார்கள்.
தரமற்ற மருந்து கொள்வனவினால் இன்று இலவச சுகாதார சேவை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. சுகாதாரத் துறையின் நெருக்கடி தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.
மக்கள் மீது அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. ஆகவே நாட்டு மக்களை கடவுள்தான் பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு நலன் வேண்டி சர்வ மத வழிபாடுகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment