மீண்டும் கொழுந்து விட்டெரியும் சீனக் கப்பல் விவகாரம் ! அனுமதியை மறுக்குமாறு டெல்லி கடும் அழுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 20, 2023

மீண்டும் கொழுந்து விட்டெரியும் சீனக் கப்பல் விவகாரம் ! அனுமதியை மறுக்குமாறு டெல்லி கடும் அழுத்தம்

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஷி யான் - 6 என்ற சீன கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்ய உத்தேசித்தள்ள நிலையில் இதற்கான அனுமதியை மறுக்குமாறு இலங்கையிடம் டெல்லி கோரிக்கை விடுத்துள்ளது.

சீன கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இந்திய பெருங்கடல் ஊடாக இலங்கைக்கு செல்கின்றமை மற்றும் அங்கு சுமார் ஒரு மாத காலம் வரை நங்கூரமிட்டு முன்னெடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்ற அறிவிப்பை டெல்லி விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து பெரும் இராஜதந்திர நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனக் கப்பலின் வருகைக்கான கோரிக்கை குறித்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.

மறுப்புறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர மோதல்களை சமநிலைப்படுத்தும் வகையில் இலங்கையின் வெளிவிவகார துறையில் அனுபமிக்க இரு அதிகாரிகளை புதிய உயர்ஸ்தானிகர்களாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இந்தியாவிற்கான புதிய உயர்ஸ்தாணிகராக மூத்த இராஜதந்திர அதிகாரியான ஷேனுகா செனவிரத்ணவை நியமிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவுக்கு யாரை நியமிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், இவ்வாரத்திற்குள் அந்த நியமனத்தை இறுதிப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த இரு நியமனங்களுமே வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷி யான் 6 கப்பலின் இலங்கை விஜயத்திற்கு கடும் எதிர்ப்புகள் இந்திய தரப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கட்டமைப்புகள் மற்றும் ஆய்வு கூடங்களை உள்ளடக்கிய ஷி யான் 6 கப்பலின் இலங்கைக்கான விஜயமானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதனை டெல்லி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்தள்ள சீன கண்காணிப்பு ஆய்வு கப்பல் நவம்பர் மாதம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்பரப்புகளில் நங்கூரமிட்டு பல்வேறு ஆய்வு நடவடிக்கைளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் இலங்கை வெளியிடவில்லை. ஆனால் குறித்த சீனா கப்பலை இலங்கையில் நங்கூரமிடும் காலப்பகுதி மற்றும் கடல் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்தும் அனுமதி வழங்குவது குறித்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக முக்கிய தகவல்கள் மூலங்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும் தென் சீன கடலில் காணப்படும் சர்ச்சைகளை தொடர்ந்து சீனா தனது இறையாண்மையை அங்கு உறுதிப்படுத்தும் நோக்குடன், 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷி யான் 6 கப்பலானது புவி இயற்பியல் ஆய்வு மற்றும் நில அதிர்வு கணிப்பு போன்றவைகளை உள்ளடக்கிய அதி நவீன அறிவியல் ஆய்வுக்கப்பலாகும்.

கடல் ஆய்வுத்திறனை அதிகரித்தல், கடல்சார் இறையாண்மை மற்றும் நலன்களை பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை இலக்காகக் கொண்டே இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஆய்வக கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட இந்த கப்பலின் செயல்பாடுகள் இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். எனவே இந்திய பெருங்கடலுக்குள் ஷி யான் 6 கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் டெல்லி விடுத்துள்ளது.

No comments:

Post a Comment