(எம்.வை.எம்.சியாம்)
போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய 8 பேர் அடங்கிய விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவுக்கமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் மற்றும் அமைச்சுக்கு அறிக்கை சமர்பிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இந்த 8 பேர் அடங்கிய விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.எம்.டபிள்யூ.டி தென்னகோன், வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி.எம்.குணரத்ன, தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.சி. மெதவத்த, சிறப்பு அதிரடிப் படை கட்டளை அதிகாரி டபிள்யூ.எஸ்.இ.ஜெயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.பி. ரணசிங்க, போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஓஷான் ஹேவாவிதாரண மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால, கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளர் என். சில்வா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
No comments:
Post a Comment