கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (30) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று நள்ளிரவு முதல் (30) அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டிருந்தன.
கடந்த ஜூலை மாதமளவில் உலக சந்தையில் கோதுமை மா விலை சடுதியாகக் குறைவடைந்த போதிலும், அதன் பயனை இலங்கை மக்களோ அல்லது அரசாங்கமோ அனுபவிக்கவில்லை.
இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காகவே கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வரையரைகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக நடவடிக்கையாகும் என்பதை நாம் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். விரைவில் இதற்கு அப்பாற் சென்று நீண்ட கால ஸ்திரமான தீர்மானமொன்று எடுக்கப்படும்.
அதற்கமையவே கோதுமை மா இறக்குமதிக்காக இனி அனுமதிப்பத்திரம் தேவையில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு முன்னர் இறக்குமதியின்போது ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கு 16 ரூபாவாக அறவிடப்பட்ட வரி, 27 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோதுமை விதைக்கு ரூ. 6 வரியும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாட்டிலேயே மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உலக சந்தையில் விலை குறைவடையும்போது உள்நாட்டிலும் விலை குறைக்கப்படும் அதேவேளை, அரச வருமானத்திலும் அது செல்வாக்கு செலுத்தும் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment