தெற்கு கடலில் தீப்பிடித்த படகு : மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 12, 2023

தெற்கு கடலில் தீப்பிடித்த படகு : மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் மீட்பு

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கைக்கு தெற்கு ஆழ்கடல் பகுதியின் சுமார் 58 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீப்பிடித்த பல நாள் மீன்பிடி படகில் இருந்த 7 மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விசேட ரோந்து நடவடிக்கைகளின்போதே குறித்த மீனவர்கள் மீட்டுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இன்று சனிக்கிழமை (12) காலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 7 மீனவர்களும் ருஹுனு குமாரி 6 எனும் பல நாள் மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடந்த 08 ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு மேற்கு கடற் பகுதியின், காலி கடல் பகுதியில் இருந்து சுமார் 107 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு தீப்பிடித்துள்ளது.

எவ்வாறாயினும், அனர்த்தம் தொடர்பில் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் விரைந்து நடவடிக்கை எடுத்த கடற்படையினர் கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களை தீப்பிடித்த படகிலிருந்து பத்திரமாக இடமாற்றம் செய்து, காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment