ஜுலை மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பேரவை உறுப்பினர்களுக்கு அநாவசியமான குறுஞ்செய்திகள், கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்துள்ளதாக பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அழைப்பாளர்களில் சிலர் தாங்கள் அரச புலனாய்வுத்துறை அதிகாரிகள் என்றும், புதிய உபவேந்தர் இப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பாதுகாப்புப் படையினரால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இறுதிக்கட்டமாக நான்கு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் உபவேந்தர் தெரிவு செய்யப்படுகிறார்.
ஜுலை 12ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் உறுப்பினர்களுக்கு இவ்வாறு அநாவசியமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அவர்கள் இதுவரை பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் புதிய உபவேந்தர் தெரிவு செய்யப்படுகையில் இவ்வாறான கொலை மிரட்டல் வருவது இதுவே முதல் தடவையாகும் என யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினகரன்
No comments:
Post a Comment