ஆரையம்பதி இலங்கை வங்கிக் கிளை (01) வியாழக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு இனம் தெரியாத சிலர் கொள்ளையிட முயற்சித்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
வங்கி கட்டிடத்தின் முன்பகுதி உடைக்கப்பட்டு கொள்ளையிடுவதற்கு முயற்சித்தபோது அபாய மணி (அலாரம்) ஒலித்துள்ளது.
கொள்ளையடிக்கச் சென்ற சந்தேக நபர்கள் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளதையடுத்து தப்பி ஓடி உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியிலிருந்து எதுவும் கொள்ளையிடப்பவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காத்தான்குடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த வங்கிப் பகுதியில் உள்ள சி.சி.டிவி கெமராக்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பொலீஸ் மோப்ப நாய்களைக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
அருகில் வசிக்கும் சில குடும்பங்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவதுக்கு முயற்சித்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
எம்.எஸ்.எம். நூருதீன்
No comments:
Post a Comment