பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும் : நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

பயங்கரவாதத்தை முறியடிக்கும் சட்டங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைய வேண்டும் : நீதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை

(நா.தனுஜா)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக் கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், அது பற்றிய கரிசனைகள் மற்றும் திருத்த முன்மொழிவுகளைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பிரதிப்பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்கினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

இச்சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு மனித உரிமைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகக் காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இச்சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகவும் காணப்படுகின்றது.

மேலும் இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதக் குற்றமாகக் கருதப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் உரியவாறானதும் தெளிவானதுமான வரைவிலக்கணம் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அரச பாதுகாப்பு அதிகாரிகள் வசம் மட்டுமீறிய அதிகாரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இச்சட்டவரைபைத் தயாரித்தவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகவும் இதனைத் தயாரிக்கவில்லை.

எனவே சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் இச்சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாம் கருதுகின்றோம்.

அதன்படி குறிப்பாக உத்தேச பயங்கரவாத சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் அதன் கீழ் பல்வேறு குற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சந்தேகநபரை குற்றச்சாட்டுக்களின்றி ஒரு வருட காலம் வரை தடுப்புக் காவலில் வைக்க முடியும் என்பதுடன் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேல் நீதிமன்றத்தினால் தடுப்புக் காவல் காலத்தை நீடிக்க முடியும் என்ற சரத்து இச்சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ளது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தின் ஊடாக இராணுவத்தினருக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ எதிராகத் தடை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவை உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினராலும் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளைக் கருத்திற்கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக் கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment