(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து, புதிய அரசியல் சூழலை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம். நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் இணைந்து பொருளாதாரத்தை ஸ்திரமடைய செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு கடந்த ஆண்டை விட இவ்வாண்டு முன்னேற்றமடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும், சர்வதேசம் இலங்கை எந்த மட்டத்திலுள்ளது என்பது குறித்து அவதானமாகவே உள்ளது.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மக்களின் அடிப்படை செலவுகள் 20 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
மக்கள் தமது அன்றாட உணவு தேவைக்காக 53 சதவீதத்தை செலவிடுகின்றனர். உணவற்ற தேவைகளுக்காக 47 சதவீதத்தினை செலவிடுகின்றனர்.
கடன்களை மீளச் செலுத்துவதற்காக 23 சதவீதத்தையும், எரிபொருளுக்காக 13 சதவீதத்தையும் செலவிடுகின்றனர்.
அத்தோடு நாட்டில் வருமானம் குறைந்தவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
சுமார் 14 இலட்சம் குடும்பங்கள் வருமை நிலையிலுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரமே தங்கியுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசாங்கத்திடம் அதற்கான எவ்வித திட்டமிடல்களும் இல்லை.
எனவே பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து, புதிய அரசியல் சூழலை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம்.
நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் இணைந்து பொருளாதாரத்தை ஸ்திரமடைய செய்ய முடியாது என்றார்.
No comments:
Post a Comment