(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டை விட்டு பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷவின் கையாளான வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொகுசு இல்லம் தொடர்பில் செய்திகளில் வெளியான விடயங்களையே நான் குறிப்பிட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சபையில் நான் இல்லாத வேளையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எனது பெயரை குறிப்பிட்டு முறையற்ற வகையில் உரையாற்றியுள்ளார். வெளிநாட்டு சக்திகளின் முகவராக நான் செயற்படுவதாக பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு உரித்தான அரச உத்தியோகபூர்வ இல்லம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது என பத்திரிகைகளில் வெளியான செய்தியை எனது உரையில் குறிப்பிட்டேன். அதை அவர் பொய் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் இன்றையதினம் பிரதான நிலை பத்திரிகைகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு -07 உள்ள சொகுசு இல்லம் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் இணக்கப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலல சேகர மாவத்தையில் வழங்கப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதி அதிக சத்தம் என்பதால் இவ்வாறு வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு உரித்தான இல்லம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவின் கையாள், புண்ணியத்துக்கு பாராளுமன்றம் வந்துள்ளவர் என்னை விமர்சிக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அலி சப்ரிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிணக்கு ஏதும் கிடையாது. நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்படுவதை மக்களுக்கு பகிரங்கப்படுத்தினேன். ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவின் கையாளின் வார்த்தை பிரயோகத்தை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment