தற்போது தேர்தல் ஒன்றுக்கான தேவை எழுந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் மக்கள் விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, தமது பிரதிநிதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள புதிய விருப்பத்திற்கு அமைய, ஏதேனுமொரு தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செயற்படவில்லையாயின், சமூகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் மக்களின் விருப்பங்கள் கொந்தளிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு தற்போது வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில், தேர்தலுக்கான தேவை காணப்படுமாயின் அதற்கான நிதியை பாராளுமன்றத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, நிதி அமைச்சிடமிருந்து மீண்டும் கோரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதனடையே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கு தயாராகவுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தேவையான ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகாரிகளை பயிற்றுவித்தல், வாக்களிப்பு நிலையங்களை தயாரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
அடுத்த தேர்தலின்போது வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்படுவமாயின் அதற்காக செலவு செய்யும் பணம் வீணாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment